Ad Code

Recent Posts

கப்டன் அப்பன் வீர வரலாற்று நினைவுகள்

கப்டன் அப்பன்

சண்முகம் சிறிதரன் 

தச்சன்தோப்பு, நாவற்குழி, 

யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 30.11.1972  

வீரச்சாவு: 21.03.1991


நிகழ்வு: மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

 

மக்களில் ஒருவன் அப்பன்


கைதடி, நாவற்குழி பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியற் பொறுப்பாளனாக இருந்தவன்.


அன்று நாங்கள் சிலாவத்துறைத் தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தோம். அப்பனும் எங்களுடன் நின்றான். அங்கு கரும்புலித்தாக்குதலை நிகழ்த்துவது அப்பன் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.


அப்பன் சொன்னான் கைதடிச் சந்தியில் கரும்புலிகளின் படங்களை ஏன் வைச்சன் தெரியுமா?


கருப்புலிகளின் படங்களை பெரிதாக கீறுவித்து அவன் வரிசையாக வைத்தபோது " ஏன் வைக்கிறாய் ?" என்று யாரும் கேட்கவும் இல்லை; அவனாகச் சொல்லவும் இல்லை.


ஆனால், இன்று சொன்னான்


"நானும் ஒரு நாள் கரும்புலியாக சாக வேணும் என்ற இலட்சியம் என்னிடம் இருந்தது.


வெடிமருந்து வண்டி தயாரிக்கப்பட்ட இடத்திலிருந்து, போர் முனைக்கு அவன் தான் ஓட்டிவந்தான். அப்போதெல்லாம் அப்பன் பூரித்துப்போயிருந்தான்


ஆனால்,


கடைசி நேரத்தில் அத்திட்டம் மாற்றப்பட்டு அந்தச் சந்தர்ப்பம் டாம்போவிற்குக் கொடுக்கப்பட்ட போது; அப்பன் இடிந்து போனான். அதுவரை அவனில் இருந்த இன்பத் துடிப்பை - ஆரவாரத்தை பின்பு நாங்கள காணவில்லை.


தாக்குதல் பிரிவோடு சேர்ந்து துப்பாக்கி ஒன்றுடன் அவன சண்டையில் இறங்கினான்.


இன்று, கைதடியில் நாவற்குழியில் - அவனுடைய மக்கள் அவனைத்தேடுகிறார்கள்.


சிலாவத்துறையிலிருந்து வந்த புலிவீரர்களிக்குள்ளே அவனைத் தேடினார்கள் 


களத்திலிருந்து வந்த வீரர்களின் உடல்களுக் குள்ளே அவனைத் தேடினார்கள்-


ஆனால்,


அவர்களுக்குப் புரிந்துவிட்டது. தங்களுடைய  அப்பன் இனி வரமாட்டான் என்று.


ஏழ்மை பற்றிப் பிடித்துக்கொண்டிருந்த ஒரு குடும்பத்திலிருந்து தான் அப்பன் போராட்டத்துக்குள் வந்தான்


எமது இயக்கத்தில் கரும்புலித் தாக்குதலைச் செய்வதற்குப் பலர் முன் வந்து கரும்புலிகள் அணியில் தங்களை இணைத்துள்ளனர். ஆனால், கரும்புலித் தாக்குதலை நடாத்தும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அப்படியான போராளிகளில் ஒருவன் தான் அப்பன்.


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு - நாவற்குழி முகாமில் சிங்களப்படைகளை நாங்கள் முடக்கி வைத்திருந்த போது அவன் தன்னைப்புலிகளுடன் இணைத்துக் கொண்டான்,


சிங்களப்படைகளையும்இந்தியப் படைகளையும் அவன் பல களங்களில் சந்தித்திருக்கிறான்,


இந்தியப்படைகள் வளைத்து நின்ற அந்த நாட்களை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்,


அப்போது நான் தென்மராட்சிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தேன்.


கைதடி நாவற்குழிப்பகுதிக்கு அரசியல் வேலைக்காக அனுப்பப்பட்ட எந்தப் போராளியும் திரும்பிவரவில்லை.


அடுத்ததாக அப்பன் தான் போனான் ஏறக்குறைய அது தற்கொலைக்குச் சமனானது.


ஒரு தீவை ஒத்து இருக்கின்ற அப் பகுதிக்குச் செல்ல இரண்டு வீதிகள். ஆனால், அவை இந்திய படை முகாம்களால் நிறைந்திருந்தன.


அங்கு நீந்தித்தான் போகவேண்டும் கரையேறுகிற போது இந்தியப்படையின் துப்பாக்கிகளை அவன் சந்தித்த நாட்களும் உண்டு.


முன்பு சின்னவனாக இருந்த போது இதே நீரில் நீந்திவிளையாடியிருப்பான் - மகிழ்ச்சிக்காக. இன்றும் உயிரையும் துச்சமாக்கி நீந்துகிறான் -மக்களுக்காக.


இந்தியப்படையின் இரண்டு கண்களுக்கும் நடுவில் அவர்களை நடுங்க வைத்தபடி அந்த பிரதேசத்தில் அவன் இயக்கத்தின் அரசியல் வேலைகளைச் செய்தான்.


அவன் அந்த மக்களோடு சேர்ந்து வாழவில்லை. அவர்களில் ஒருவனாகவே வாழ்ந்தான். இன்று அப்பன் இல்லை. ஆனால் அவர்கள் இதயத் துடிப்போடு அவன் கலந்திருக்கிறான்.


இப்போதெல்லாம் அங்கு போகும்போது - அப்பனால் நிறைந்திருந்த அத்தெருக்கள் வெறுமையாகி விட்டது போலவும், அந்த மக்களின் கண்களில் இருந்த மகிழ்ச்சியைக் காணவில்லைப் போலவும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகின்றது.


இப்போது-


தங்களுடைய அப்பனுக்காக கைதடியில் அந்த மக்கள் ஒரு நினைவாலயம் எழுப்புகின்றார்கள்.


தினேஸ்




விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code