வீரவேங்கை அப்பன்
அப்பாச்சாமி கருணாநிதி
கணேசபுரம், கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 10.02.1969
வீரச்சாவு: 08.09.1999
நிகழ்வு: கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் படையினருடன் ஏற்பட்ட மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
புதிய சகாப்தம்
"உதெல்லாம் உங்கட கனவு. துயிலும் இல்லத்தில உங்களையோ?"
“ஏன் எல்லைப்படை எண்டாலும் சண்டைக்குதானே போறன். சண்டையில செத்தா துயிலுமில்லம்தான் தெரியுமா?."
"உங்கட உந்த எல்லைப்படையை நம்பி சண்டையில அதுவும் முன்பொயின்ரில விடுவாங்களே?."
"நீ என்ன வேணுமெண்டாலும் சொல்லு. போயிட்டு திரும்பி வருவன் அல்லது துயிலுமில்லத்தில் புதைக்கிற மாதிரி மாவீரனா வருவான்"
"சரி சரி உந்தக் கதைகளை விடுவம். வெளிநாட்டுக்குப் போறதுக்குத் தேவையான அலுவல்கள் இன்னுமிருக்கு ஞாபகமிருந்தா சரி"
"நான் சுவிசுக்குப் போனாலும் சரி ஜேர்மனிக்குப் போனாலும் சரி,ஐஞ்சு வருசமோ ஆறுவருசமோ நிண்டு உழனச்சுக்கொண்டு வந்திடுவன். பிள்ளையளை விட்டிட்டு என்னால நெடுக அங்கினை இருக்கேலாது. ஆனா வெளிக்கிறதுக்கிடையில அஞ்சாறு தரமாவது எல்லைக்குப் போயிட்டு வந்திடவேணும். பின்னுக்கு விட்டிச்சினமெண்டால் நான் எப்படியும் சண்டை நடக்கிற இடத்துக்குப் போயிடுவன். பிறகு வெளிநாட்டால வந்து நிக்க நீ இந்த நாட்டிற்கு என்ன செய்தனி என்று மற்றவை என்னைப் பார்த்துக் கேட்கக்கூடாது உமா."
"நான் ஒன்றுக்கும் மறுப்பில்லை. கொழும்புக்கு வெளிக்கிட்டு வாங்கோ என்று மறுமொழி வாறதுக்கிடையில போகவேண்டிய இடங்களெல்லாம் போயிட்டு வந்திடுங்கோ"
இப்போது அப்பன் எந்த ஐரோப்பிய நாட்டிலும் இல்லை. புனிதமான எங்கள் மாவீர உறவுகளின் உறங்குமிடமான துயிலும் இல்லத்தில். தாயக மீட்புப்போரின் புதிய அத்தியாயம் வன்னி மண்ணில் வேர் கொண்டபோது முன்னெழுந்து ஓடிவந்து முதல் வித்தான பெருமையை தனதாக்கிக் கொண்ட அப்பன் "காலங்கள் தாண்டியும் வாழும்" வல்லமை பெற்றவனாய் தமிழர் வரலாற்றில் என்றென்றும் உச்சரிக்கபட்ட,உச்சரிச்சரிக்கப்படப் போகும் பெயராகி ஆண்டுகள் ஐந்து.
நான்கு மாத கர்ப்பிணியான உமாவிடம் "தற்செயலாக எனக்கேதாலும் நடந்தா பிள்ளையளை கவனமாக பார்" என்ற அப்பன் மைத்துனிடம் "நான் கெதியில் வந்திடுவன். அக்காவைக் கவனமாய்ப் பாருங்கோ" என்று விட்டுப் பணிக்கெனப் புறப்பட்டபோது அந்தத் தமிழ் மகனிடம் சொல்லமுடியாத பெருமை. குடும்பக் கடமைக்காக ஏர் பிடித்து சேற்றுவயல் உழுத அந்தத் தொழிலாளி, போர்க்கருவி தூக்கி, பகை களம் நுழைந்தது, தேசக்கடமைக்காய். ஏழு நாட்கள் களமுனையில் எதிரியின் அரண்களும், எதிரியும் தெளிவாகத் தெரியும் தூரத்தில் ஓர் போராளியாய் அந்த வீரன். அன்று வரைக்கும் தமக்காய் தனித்தே பாரம் சுமந்த, தம் விடுதலைப்படையின் வீரர்களுடன் ஒன்று கலந்து அவர்களின் உணவோடு, உணர்வோடு என அனைத்திலுமே பங்கு கொண்டு பணி செய்த திருப்தியான நாட்களுக்குள் அந்தத் தமிழன். அவர்களுக்கான ஆறு நாட்கள் முடிந்து அவர்கள் அனைவரும் ஊர் திரும்பும் ஏழாம் நாள். அது நாள் வரை கேட்டும், படித்தும், மேலோட்டமான பழக்கத்தில் அறிந்தும் கொண்ட உறவுகளை, உதிரம் ஊற்றி ஊற்றி எல்லையில் விழுந்து தம்மையுருக்கிய இனியவர்களை, இளையவர்களை அருகிருந்து ஒன்றாகி கலந்திருந்து பார்த்த அவர்களுக்கு அந்த ஏழாம் நாள் சொல்லமுடியாத வெப்பியாரம். புரிய முடியாத தவிப்பு. ஆனாலும் என்ன? போய்த்தானே ஆகவேண்டும். அவர்களுக்கென மனைவி, பிள்ளைகள், தாய் என உறவுகள் பார்த்திருக்கும்போது, மறுபடியும் வரத்தானே போகின்றோம் என்ற தேற்றுதலுடன் அவர்கள் புறப்பட்ட போது தான் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது. எங்கோ தொலைவில் உருமறைப்பில் இருந்த குறிபார்த்துச் சுடும் எதிரியின் ரவை அப்பனை ஊடுருவி.....
ஏழாம் நாள் தந்தையின், கணவனின் மைத்துனனின் வரவை அவர் வந்து சொல்லப்போகும் ஆர்ப்பாட்டமான கதைகளை, சந்தோசத்தை, பெருமையைக் காணக் காத்திருந்த அந்தக் குடும்பத்திற்கு உயிர் அடங்கிப்போன அப்பனின் வித்துடலே ஈகமும் வீரமும் நிறைந்த பல கதைகளை மௌனமாய் சொல்லியபடி....
தந்தையை அறியாத அந்த நான்கு மாத கரு இப்போது மிதுஷா. ஐந்து வயது துருதுரு வால். தந்தை பற்றிய கேள்விகளால் தாயைத் திணறடிக்கும் வாண்டு. படத்தில் இருக்கும் தந்தையை
"இவர் இவ்வளவு சின்னனா இருக்கிறார். எப்ப வளர்ந்து வந்து சோலரும், கட்டிலும் வாங்கித் தரப்போகிறார்? அம்மா இவர் வந்தவுடன் இரண்டையும் கேட்டு வாங்கித் தந்திடுங்கோ"
என்பதும் நினைத்தவுடன் துயிலுமில்லம் போய் அங்கு உறங்கிக்கொண்டிருக்கும் தந்தையுடன் கதைத்துவிட்டு வருவதும் மட்டும்தான் மிதுஷாவுக்கு கிடைத்தது.
"அம்மா அப்பாவுக்கு பேரீச்சம்பழம் குடுத்திட்டு வருவமா" "சரி போவம்" "ஒன்று, இரண்டு. சரி அம்மா குடுத்தாச்சு போவம்"
"இவ்வளவு வச்சிருக்கிறீங்கள் ரெண்டுதான் வைக்கிறதா?" "அவருக்குக் காணும் மிச்சம் எனக்கு" இப்படித்தான் உமாவின் குழந்தைகளின் நாட்கள் இப்போதெல்லாம். "மோட்டார் சைக்கிள் எடுத்து நீங்கள் ஒவ்வொரு ஞாயிறும் அப்பாட்டைக் கூட்டிக்கொண்டு போக வேணும்" என்ற குழந்தைகளின் வேண்டுகளுக்கு இணக்கம் தெரிவித்து, "அவைக்கு அதுதானே கோயில் கிழமைக்குக் கிழமை கூட்டிட்டிப்போறதில எனக்கும் திருப்தி, நிறைவு'' என்கின்ற உமா ஓர் எழுதுனராக தன் வாழ்நாளைத் தொடர்ந்தபடி.....
நன்றி: எல்லைகாக்கும் இல்லங்கள்
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்