Ad Code

Recent Posts

உகண கப்பல் மீது கரும்புலித்தாக்குதல் மேற்கொண்ட கரும்புலிகளின் நினைவு நாள்

26.06.2000  அன்றைய பொழுது அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள்.

“அடிக்கடி வீட்டை வா மோனை” என்று கூறிய தன் தாயிடம் சொல்கிறாள் “கிட்டடியில வந்திடுவன் அம்மா” அவள் கூறியதன் அர்த்தம் புரியாது கண்ணீரோடு கட்டியணைத்து முத்தமிட்டு விடைகொடுக்கின்றாள் அந்தத் தாய். இன்னும் சில நாட்களில் நிழற்படமாகத்தான் தன் மகள் தன்னிடம் வரப்போகிறாள் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை அந்த தாயின் உள்ளம்.

ஒல்லியான தோற்றம், எப்போதும் முகத்தில் இனிய புன்னகை இவள்தான் மேஜர் சந்தனா. தனது இனத்தின் விடுதலை வேண்டிப் போராடப் புறப்பட்ட ஆயிரம் ஆயிரம் வீராங்கனைகளில் இவளும் ஒருத்தி. மகளிர் படையணியில் இருந்து 1995ஆம் ஆண்டு தலைவரின் அனுமதியுடன், கரும்புலிக் கனவுகளுடன் தன்னை கடற்புலிகளின் அணியில் இணைத்துக்கொண்டாள். கரும்புலி அணிகளுக்கான விசேட பயிற்சிகளை முடித்துக் கொண்டு எதிரியின் இலக்குகளைத் தேடத் தொடங்கினாள். எதிரியின் அதிஸ்ரம், அவள் வெடி மருந்து நிரம்பிய படகுடன் கடலில் இறங்கும் போதெல்லாம் அவன் தப்பிப் பிழைத்துச் சென்றுகொண்டிருந்தான். சந்தனா கூட அடிக்கடி கூறுவாள் “என்ர படகு கடலுக்க நிக்குதெண்டு நேவிக்காரனுக்குக்கூடத் தெரியும் அதுதான் உயரவாப் போறான்” என்று.

தன்னுடைய  நகைச்சுவைப் பேச்சால் அனைவரது உள்ளங்களிலும் குடிகொண்டிருந்த சந்தனா, தன் இறுதிக் கணங்கள் வரைகூட எந்தவித மாற்றங்களுமின்றி அதே சிரிப்பு, அதே நகைச்சுவைப் பேச்சு என கலகலப்பாகவே இருந்தாள். அவளது இறுதித் தாக்குதலுக்காக படகை கடலில் இறக்கும் போது தன் சக போராளியிடம் தனது புதிய காலணியை கழற்றிக் கொடுத்து விட்டு “நான் திரும்பி வரமாட்டன்” இதை நீ வைச்சிரு என்று கூறிவிட்டு மறுநிமிடமே தனது குறும்புத் தனத்துடன் சொன்னாள் “திரும்பி வந்தா குறைநினைக்காமல் கழட்டித் தா” என்று. அந்த இறுதிக் கணப்பொழுதிற்கூட மற்றவர்களைச் சிரிக்க வைத்து மகிழ்ந்தாள் சந்தனா.

26- 06- 2000 அன்று யாழ் குடா நாட்டு படைகளுக்குரிய ஆயுதங்கள், வெடிபொருட்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றை ஏற்றிக்கொண்டு கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்துகொண்டிருந்தது ‘உகண’ கப்பல். கடற்புலிகளது சண்டைப்படகுகளும், கரும்புலிப்படகுகளும் கடலில் களமிறங்கின. கடற்படையின் இரு பீரங்கிப் படகுகள் மற்றும் 6 டோராப் படகுகள் சகிதம் பாதுகாப்பாக வந்தது ‘உகண’ கப்பல். பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து 55 கடல்மைல் தொலைவில் வைத்து கடற் புலிகளால் வழிமறிக்கப்பட்டு கடும் சமர் வெடித்தது. சமர் நடுவே வேவகமாக உள் நுழைந்த கரும்புலிப் படகுகள் உகண கப்பலுடன் மோதி வெடிக்க, உகண முற்றாக எரிந்து கடலில் மூழ்கியது. 10 கடற்படையினர் பலியாக கடற்படையினரின் டோராவும் சேதமாகிப்போனது.

மேஜர் சந்தனாவுடன், கடற்கரும்புலிகளான லெப். கேணல் ஞானக்குமார். மேஜர் சூரன், மேஜர் நல்லப்பன், கப்டன் இளமதி, கப்டன் பாமினி ஆகிய ஆறு காவிய நாயகர்களும் கடலில் சங்கமமாகினர்.

கடற்கரும்புலி 
மேஐர் சந்தனா 
குணசிங்கம் கவிதா

சுறுசுறுப்பு, சுட்டித்தனம், மிடுக்கான கதை, மற்றவர் மனத்தைக் கவரும் நகைச்சுவையான பேச்சு இவை எல்லாவற்றிற்கும் சொந்தக்காரிதான் கடற்கரும்புலி மேஜர் சந்தனா.


1990ம் ஆண்டு தன்னைப் போராளியாக மாற்றிக்கொண்டவள். மகளிர் படையணியின் தாக்குதலணியில் செயற்ப்பட்ட சந்தனா களங்கள் பலதை எதிர்கொண்டாள். இருமுறை பலமான விழுப்புண்களையும் தாங்கிக்கொண்டாள்.


இதன்பின்னர் தமிழீழ சட்டக்கல்லூரியில் கற்பதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் சந்தனாவும் ஒருவர். தமிழீழத் தேசியத் தலைவர் முன்னிலையில் சட்டவாளராக உறுதிப் பிரமாணம் செய்து வெளியேறிய சந்தனா நீதியான, நேர்மையான செயற்பாட்டின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டாள். எனினும் மக்களின் நல்வாழ்விற்காய் தன்னை அர்ப்பணிக்கத் துணிந்த சந்தனா, கடற்கரும்புலிகள் அணியில் இணைந்து இலக்கிற்காக நீண்டகாலம் காத்திருக்க நேருகிறது.


நீண்டகாலமாய் காத்திருந்த இவள் பொறுமைக்கு வாய்ப்பாய் உயரக்கடலில் எதிரியின் எண்ணைக் கப்பலான உகணக் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொள்ளுவதே இவளது இலக்கானது.


உகண கப்பலில் மோதியபோது உப்புநீரில் தீ மூண்டு வீரவரலாறாகிப் போனாள்.



கடற்கரும்புலி 
லெப்.கேணல் ஞானக்குமார்
அழகிப்போடி விநாயகமூர்த்தி 

மீன் பாடும் தேன் நாடாம் இதுதான் இவன் பிறந்த மண். மட்டக்களப்பு 12ம் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்ற இவன் கனரக ஆயுதப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டான்.


இதன்பின்னர் யாழ்.மாவட்டம் வந்து வேவுப்பயிர்சிகளை நிறைவு செய்தவன், பல தாக்குதல்களுக்கான வேவு நடவடிக்கைகளில் முன்னின்று செயற்படுகிறான்.


கொக்குத்தொடுவாய்ச் சமர், ஓயாத அலைகள் 01, ஓயாத அலைகள் 02, ஜெயசிக்குறு என தனது வேவுத்திறனை வெளிப்படுத்திய ஞானேஸ்வரன் சென்றகளமேல்லாம் வீரவடு ஏந்தி வென்று வந்திருந்தான்.


கடற்கரும்புலிகள் அணியில் தன்னை சேர்த்துக்கொண்டிருந்த இவன், உகணக் கப்பலை தகர்த்து வீரவரலாறாகிப் போனான்.




கடற்கரும்புலி 
மேஐர் சூரன் 
இராசதுரை இரவீந்திரன்

மன்னார் மாவட்ட தாக்குதல் அணியில் இருந்துதான் இவனது செயற்பாடு தொடங்கியது. பல தாக்குதல்களில் சண்டைசெய்த சூரன், தவளைத் தாக்குதலில் தனது இடதுகாலை தொடையுடன் இழந்தான்.


இதன் பின்னர் புலனாய்வுத்துறையில் சிலகாலம் தனது செயற்பாட்டை விரித்திருந்தான். இந்தக் காலப்பகுதியில்த் தான் தனது சுயவிருப்பில் கடற்கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொள்ளுகின்றான்.


இவனிற்கான கரும்புலிப் படகு வழங்கப்பட்ட போது, தனது படகு இயந்திரங்களைப் படியவிடுதல், ஆயுதங்களை சுத்தம் செய்தல், தொலைத்தொடர்பு சாதனங்களை சீர்செய்தல் என படகின் முழுப் பராமரிப்பு வேலைகளையும் ஒருகையில் ஊன்றுகோலுடன் கடற்கரை மணலில் ஓடிஓடிச் செய்வான்.


இவ்வாறாக இவன் பெருவிருப்புடன் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது. தேசவிடியலை நெஞ்சினில் சுமந்த கனவுகள் மெய்ப்பட உகண கப்பலை தகர்த்து வீரவரலாற்றை எழுதினான்.



கடற்கரும்புலி 
மேஐர் நல்லப்பன் 
வேலுப்பிள்ளை ராசன்

எந்த இறுக்கமான கடற்சண்டையாக இருந்தாலும் சரி, நடவடிக்கைப் படியாக இருந்தாலும் சரி, பழுதடையும் இயந்திரங்களை இலகுவாக சீர் செய்து கொண்டு அந்த இடத்துக்கு விரையும் நல்லப்பன் மற்றவர்களால் மதிக்கப்படும் சிறந்த இயந்திரப் பொறியியலாளன்.


இயந்திரம் சீர்செய்யும் களத்தில் இவனது பணி ஆழமானது. திருத்த முடியாது என கைவிடப்படும் இயந்திரங்களை எல்லாம் தன் பெரு முயற்சிகளினால் சீர் செய்துவிடும் நல்ல தற்துணிவு இவனிடத்தில் இருந்தது.


அமைதியான அவனது சுபாவம். தானும் தனது வேலையென ஒதுங்கிப்போகும் பக்குவம் எல்லோரையும் இவனிடத்தில் ஈர்க்கவைத்தது.

படகோட்டியாக, தொலைத்தொடர்பாளனாக, சகல ஆயுதங்களையும் இயக்கி சண்டை செய்யக்கூடிய வல்லமை பெற்றிருந்த நல்லப்பன் பல கடற்சமர்களில் பங்கெடுத்தான்.


கடற்கரும்புலிகள் அணியில் இணைந்திருந்த நல்லப்பன், ஆழகடலேங்கும் விடுதலைக்கு பலம் சேர்க்கும் பணியிலும் தனது கடமையைச் செய்திருந்தான்.


இவ்வாறாக விடுதலைக்காக உழைத்த நல்லப்பன். எதிரியின் உகண கப்பல் தகர்ப்பில் வீரவரலாறு படைத்தான்.




கடற்கரும்புலி 
கப்டன் இளமதி
கனநாயகம்பிள்ளை ஜெயசித்திரா

தீவகம் வேலணை இதுதான் இவளது சொந்தமண். இந்தமண் 1990ம் ஆண்டு சிறிலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போது நமது மண்ணை எதிரியிடமிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக தன்னையும் போராளியாக மாற்றிக்கொண்டவள் தான் இளமதி.


பிறப்பிலே இவளது கால் ஒன்று இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் தன்னால் பயிற்சிகளை எடுத்து ஒரு போராளியாக முடியும் என்ற இவளது நம்பிக்கை வெற்றியைத் தந்தது.


பயிற்சியின் பின்பு தொலைத்தொடர்புக் கல்வியைப் பெற்றிருந்த இளமதி கடற்புலிகளின் கரையோர பாதுகாப்பு நிலையத்தில் தனது கடமையைச் செய்தாள்.


இந்த நேரத்தில் கொக்குத்தொடுவாய்ச் சமரில் இவளது சகோதரி வீரச்சாவடைந்த போது இவளுக்குள் இருந்த விடுதலை உணர்வு இன்னும் இன்னும் பெருவீச்சாகியது. இதுவே கடற்கரும்புலியாக இவளை மாற்றியது.


செவ்வானம் படையணியில் கடற்கரும்புலிகளுக்கான பயிற்சிகளை நிறைவு செய்தவளுக்கு, இலக்கு இலகுவில் கிடைக்கவில்லை. தொடர்ந்து தனது மனதை தளரவிடாது கடற்தாக்குதல் அணியில் தொலைத்தொடர்பாளராக, படகுச் சாரதியாக, இயந்திரத் திருத்துனராக தனது பணியைச் செய்திருந்த இளமதி எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நாளும் வந்தது.


கூட நின்ற தோழியருக்கு இனி நான் வரமாட்டேன் வெற்றிச் செய்திதான் வரும் என்று கூறிச்சென்றவள் எதிரியின் உகண கப்பல் தகர்ப்பில் வெற்றிச் செய்தியைத் தந்து வீரகாவியமாகிப் போனாள்.


கடற்கரும்புலி 
கப்டன் பாமினி
பரராஜசிங்கம் விஜலட்சுமி 

தொடக்கத்தில் மக்களுக்கான அரசியல் பணியை செய்துவந்தவள் பின்னாளில் கடற்புலிகளின் சுகன்யா தரைத்தாக்குதல் அணியோடு இணைந்து ஓயாத அலைகள் 01, சத்ஜெய எதிர்ச்சமர், ஜெயசிக்குறு எதிச்சமர் என எ.கே எல்,எம்.ஜி (AK – LMG) உடன் அணித்தலைவியாக நின்று களங்களை எதிர்கொண்டாள். இந்த அமைதியானவளுக்கு கிடைத்த இலக்கு ஆழமானது.


சிறிலங்கா படைகளுக்கு விநியோகப் பணியில் ஈடுபட்ட உகண கப்பல் மீது துணிகரத் தாக்குதலில் வெற்றிச்செய்தியை பரிசாக்கி வீரகாவியமானாள் எங்கள் பாமினி.

கப்டன் பாமினி 



தமிழீழ தாயக விடுதலைக்காகவும் எம் மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் போராடி மடிந்த மேஜர் சந்தனா, கடற்கரும்புலிகளான லெப். கேணல் ஞானக்குமார். மேஜர் சூரன், மேஜர் நல்லப்பன், கப்டன் இளமதி, கப்டன் பாமினி மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code