லெப்.கேணல் முகுந்தா
முத்துக்குமார் கங்கேஸ்வரி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 22.02.1974
வீரச்சாவு: 19.06.1997
நிகழ்வு: வவுனியா நெடுங்கேணியில் நிலைகொண்டிருந்த படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு
எங்கள் விடுதலைக்கான பயணத்தில் அவளது இழப்பு எவராலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. ஒரு தனி மனிதப்பிறவி. போராளி என்பதை மீறி, தன்னை அர்ப்பணித்து அவள் ஆற்றிய பணி அதிகம். எத்தனையோ போராளிகள் கூட்டிணைந்து நடத்தும் தாக்குதல்களின் வெற்றிக்கு மூலவேர்களைத் தாங்கி நின்றவள் முகுந்தா.
சாதாரண சம்பவங்களை அல்லாமல் தான் வாழ்ந்த கடைசி நிமிடம் வரை மறக்க முடியாத எத்தனையோ மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவங்களைச் சந்தித்து, அவற்றிலிருந்து விரிந்த புதிய சிந்தனைகளைக் கொண்டு மேலும் மேலும் கட்டியெழுப்பப்படவேண்டிய எங்கள் படையணியைப்பற்றி அடிக்கடி கனவு கண்டவள். விடுதலை நெருப்பைக் கண்ணினுள் எரியவிட்டு, கண்ணி வயல்களுக்குள்ளால் ஊர்ந்து தவழ்ந்து பனி, மழை, வெயில், பகல், இரவு பாராது அவள் எடுத்த வேவுத் தகவல்கள்தான் சமர்க்களங்களில் எமது தாக்குதலுக்கான மூலாதாரமாகியது.
தம்மால் செய்யமுடியாது என்று வேறு யாரும் கைவிட்ட வேலைகளை என்னால் முடியும். நான் செய்கிறேன் என்று முன் வந்து செய்து முடித்தபோது அவளுள் பிரகாசித்துக் கொண்டிருந்த ஆளுமையை எம்மால் இனம் காண முடிந்தது. 1990 இல் நடுப்பகுதியில் வல்வெட்டித்துறையிலிருந்த தனது குடும்பத்தை விட்டு, விடுதலைப் போராட்டப் பாதையில் முகுந்தாவும் வந்து சேர்ந்தாள்.
1991இல் வேவுப் பயிற்சிக்கென விடுதலைப் புலிகள் மகளிர் படையணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரத்தில் தனது பெயர் இல்லை என்பதைப் பார்த்துவிட்டு, ஆர்ப்பாட்டம் செய்து அடம்பிடித்து அந்தக்கடினமான பணியில் தன்னைச் சேர்த்துக் கொண்டாள். அன்றிலிருந்து தொடங்கிய வேலை அவள் இல்லாத சண்டைகளும் வேவுகளும் இல்லையென்று சொல்லுமளவுக்கு நீண்டிருந்தது. கட்டைக்காடு, பூநகரி, மண்டைதீவு, கொக்குத் தொடுவாய், வெற்றிலைக் கேணி, சூரியக்கதிர் 1-2, 1996இல் ஆனையிறவுதட்டுவன்கொட்டி, முல்லைத்தீவு, சத்ஜெய என்று விரிந்து சென்ற சமர்க்களங்களில் எமது தாக்குதலுக்கு உயிர் நாடியாக அவளது வேவுத் தகவல்கள் இருந்தன.
அவள் வேவு பார்த்த நடவடிக்கைகளில் சூரியக்கதிர்-2 சற்று வித்தியாசமானது. மக்களோடு மக்களாக யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச் சென்றவர்களோடு சேலை கட்டி, தென்மராட்சி முகாமொன்றுக்குச் சென்று, இராணுவத்தினரிடம் நீர்வாங்கிக் குடித்து அங்கிருந்து ஆயுத தளபாடங்கள், நிலைகள் பற்றிய தகவல்களைக் கொண்டு வந்து சேர்த்தது வரை தனியாகச் சென்ற துணிவு, எத்தகைய வேலையையும் இந்த மண்ணுக்காய் ஏற்றுச் செய்து முடிப்பாள் இவள் என்பதை நிரூபித்தது. தானும் ஒரு கரும்புலியாகச் சென்று தனது அர்ப்பணிப்பின் மூலம் நிறையச் சாதிக்க வேண்டும் என்ற கனவு முகுந்தாவுள்ளும் விரிந்தது.
1994இல் அண்ணைக்குக் கடிதம் எழுதியபோது வேவுப்பணியையும் தான் அவ்வாறுதான் நினைக்கின்றேன் என்று அண்ணையிடம் இருந்து பதில் கிடைக்க, தொடர்ந்தும் தனது பணியில் முழுமூச்சாக முகுந்தா ஈடுபடத் தொடங்கி விட்டாள்.
தாக்குதலுக்கு முன் மாதக்கணக்காக வேவுபார்த்து சண்டைக்கு வழிகாட்டி, தாக்குதலில் பங்கு பற்றி, விழுப்புண்ணேற்று அவை குணமடைய மீண்டும் வேவுக்குச் சென்று......... இப்படி ஒரு சுழற்சிமுறையில் மீண்டும் எமக்கருகில் அவள் வந்து விடுவாள். இவ்வளவுக்கு நடுவில் அவள் ஒரு குஷியான பேர் வழி, முகாமில் அவள் நிற்கிறாள் என்பது வாசலில் நிற்கும் போதே தெரிந்து விடுமளவிற்குப் பெரிய தொண்டை . இதனால் "தொண்டா" என்றே எல்லோரும் அவளை கூப்பிடத் தொடங்கி விட்டனர். மரணப் பொறிக்குள் நின்று கொண்டு எந்தவித நெருக்கடிக்குள்ளும் குறித்த வேலையைச் செய்து முடிக்கும்
அவளது செயலாற்றலும் திறமையுமே இறுதி நாட்களில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் சிறப்புப் படையணி ஒன்றுக்கு பொறுப்பாளராக அவளை நியமிக்க வைத்தது. அந்தப் படையணியைத் திறம்பட வழி நடத்தி பெரிய பெரிய விடயங்களையெல்லாம் பெண் போராளிகள் சாதிக்க வேண்டும் என்று தனது சின்னஞ்சிறிய இதயத்துக்குள் ஏராளமான கனவுகளைச் சுமந்து கொண்டிருந்தாள் அவள்.
18.06.1997 அன்று அவளது துடிப்பு அடங்கிப்போன வேளையில் அந்தக்கனவு மொட்டுக்கள் முகையவிழ்த்து பூக்களாகியிருந்தன. அவற்றை அள்ளியெடுத்து எமது இதயங்களோடு இறுகத் தழுவிக் கொண்டு எம்மால் நிமிர்ந்து நிற்கமுடிந்ததே தவிர, கண்ணீர் சொரிய முடியவில்லை . ஆம் அவளுக்கும் அதுதான் விருப்பம். அவளது நினைவுகளை மீட்டுப் பார்க்கும் இந்தச் சிறிய பக்கத்தில் மட்டும், நாம் எழுதிய மொழியில் மட்டும் அடங்கி விடாது. நீண்டு பரந்து எம்மில் வியாபித்து.
முகுந்தா மறந்துவிட முடியாத ஒருத்தி.
0 கருத்துகள்