கிருஸ்ணபிள்ளை சுபாஜினி
தமிழீழம்: யாழ் மாவட்டம்
வீரப்பிறப்பு: 30.06.1975
வீரச்சாவு: 15.05.1997
எமது தலைவன் பூத்த மண்ணாம் வடமராட்சியின் ஒர் கிராமமான துன்னாலையில் பிறந்து வளர்ந்தவள் தான் ரத்தி. இவள் தனது கல்வியை வடமராட்சி வடஇந்து மகளிர் கல்லூரியில் கற்று வந்தாள் இவள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தாள் இவற்றில் மட்டுமன்றி கலைநிகழ்ச்சிகளிலும் இவள் திறமை விளங்கியது. இவ்வாறாக இவளது கல்வி தொடர்கையில் எமது மண் அந்நியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட நினைவுகள் இவள் கண் முன் நிழலாடியது.
இவளின் ஒன்றுவிட்ட அக்காவான கப்டன் லீமாவும் இவளும் ஆருயிர் சகோதரிகள் இவர்களைப் பார்ப்பவர்கள் எவரும் உடன் பிறப்புக்கள் என்று தான் கூறுவார்கள் அப்படி ஒரு பாசப்பிணைப்பில் தான் இருவரும் வளர்ந்தவர்கள் இருவரும் வீட்டில் யார் முதல் இயக்கத்துக்கு செல்வது என்று சண்டைபிடிப்பார்கள் கப்டன் லீமா கூறுவார்.
“சுபா நீ நில் நான் போறன் நீ வீட்டில் ஒரே பிள்ளை” என்று அதற்கு றத்தியன் பதிலோ “இல்லையக்கா நான் போறன் நீங்கள் நில்லுங்கோ அன்ரி பாவம் என இருவருக்கும் வாக்கு வாதம் தொடரும்.
1990-ன் முற்பகுதியில் ஒரு நாள் காலை 8 மணியளவில் கப்டன் லீமா தனது பாசமான சகோதரிக்கும் கூறாது எல்லோருக்கும் தலை மட்ல் எழுதிவைத்துவிட்டு தாய் மண்ணைக் காக்க பயிற்சிப்பாசறை நோக்கி செல்கின்றாள்.
லீமாவின் தாயார் அழுதவண்ணம் இருக்க அன்று காலை 10 மணிக்கு “அன்ரி அழாதேங்கோ நான் அக்காவை பார்த்துக்கொண்டு வாறன் என்று கூறிவிட்டு தானும் தாயகப் போரில் இணைந்து கொள்ள விரைகின்றாள். ஆம் இருவரும் மகளிர் படையணியின் ஏழாவது பயிற்சி முகாமில் தமது பயிற்சிகளை முடித்தார்கள் பின் இருவரும் வெவ்வேறு கடமைகளுக்காக அனுப்பப்படுகின்றனர்.
கப்டன் லீமா 1991ல் ஆனையிறவுச்சமரில் விரகாவியம் ஆகின்றாள் இச் சமரில் றத்தி மிகவும் நிதானத்துடனும் முகாமை அழிக்க வேண்டும் என்ற உறுதியுடனும் தனது குழுவையும் நகர்த்தி தானும் நகர்கின்றாள். குண்டுமாரி பொழியும் வேளைதனில் லீமாவின் உடன் பிறப்பென பாசம் வைத்த றத்தியின் உடலையும் குண்டு பதம் பார்த்து குருதி சொரியவைத்தது. அவள் மயக்கமடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டாள்.
வவுனியா ஓமந்தையில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு.
2ம் லெப். மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி.
அங்கு மயக்கம் தெளிந்தவுடன் “என்ரை அக்கா ஒரு பிரச்சினையும் இல்லாமல் நிக்கிறாவா” என அருகில் நின்ற தோழியிடம் கேட்கின்றாள் தோழிகள் இவளின் பாச அக்காவின் இழப்பை இப்போது எப்படிக்கூறுவது என நினைத்து பின் ஒருவாறு தயங்கித் தயங்கி சகோதரியின் இழப்பை தோழி கூறுகிறாள் இவளின் குரல் மிகவும் உறுதியுடன் பின் வருமாறு ஒலிக்கின்றது. “என்ரை காயத்தை வேளைக்கு மாத்தி விடுங்கோ என்ரை அக்காவை சுட்டவனோடை நான்போய் சண்டை பிடிச்சு, சுடுவன்” என்று பின் இவளின் காயம் மாறினாலும் கை ஒன்று இயலாமல் போனது இவளது திறமையைப் பார்த்த மருத்துவப் பொறுப்பாளர் “றத்தி நீங்க மருத்துவப் பிரிவில கொஞ்ச நாளைக்கு வேலை செய்யுங்கோ” என்று கூறினார் அதற்கு அவள் “நான் மாட்டன் எனக்கு கை ஏலும் என்னை சண்டைக்கு விடுங்கோ” எனக் கேட்டு சண்டைபிடித்தாள்.
பின் எல்லோரின் வற்புறுத்தலினாலும் கொஞ்சக் காலம் செய்யிறன் என்று தனது கடமையைத் தொடர்கிறாள் இவளின் மனமோ மிகவும் இளகிய மனம் மற்றவர்கள் துன்புறுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மனநிலை இவளுக்கு இல்லை அத்துடன் மிகவும் நகைச்சுவையாக கதைகள் கூறி எல்லோரையும் சிரிக்க வைப்பாள் இவளுக்கு கையுடன் வாயிலும் காயம் ஏற்பட்டு அதற்கு தையல் போடப்பட்டு இருந்தது.
நோயாளர் தங்களுக்கு என்ன விருப்பமான உணவு கேட்டாலும் உடன் எங்கு சென்றாவது வாங்கி வந்து கொடுப்பாள். இவளின் பணி மருத்துவப்பிரிவில் தொடர்கையில் எமது தளபதியால் புதிய போராளிகளுக்கு பயிற்சி வழங்க என பயிற்சி ஆசிரியராக இவள் நியமிக்கப்படுகின்றாள். புதிய போராளிகளை மிகவும் சிறந்த போராளிகளாகவும் உறுதியுடையவர்களாகவும் மிகவும் கண்டிப்புடன் வளர்த்தாள்.
பின் தான் சண்டைக்கு போக வேண்டும் என்று கேட்டு பல சண்டைகளில் பங்கு பற்றுகிறாள். இப்படியாக முல்லைச்சமரிலும் தனது குழுவுடன் இவளும் மிகவும் ஆவேசத்துடன் முன்னேறுகின்றாள். இறுதி மட்டும் இவள் சண்டை செய்கிறாள் இடையில் எமது விசேட தளபதி வோக்கித் தொடர்பு கொண்டு உன்ரை பக்கம் என்ன மாதிரி றத்தி என்று கேட்க “அக்கா நான் ஆமியை முன்னேற விடமாட்டன் அவன் அப்படி முன்னேறி வாற தென்டா என்ரை உடலை தாண்டித்தான் வருவான் என்று மிகவும் உறுதியுடன் கூறுகிறாள்.
“ஜயசிக்குறுய்” படையெடுப்புத் துருப்புக்கள் மீதும் நெடுங்கேணிப்பகுதியில் 15.05.1997 அன்று இவளின் அணி மிகவும் உக்கிரமாக சண்டை செய்கிறது. இவள் ஓடி ஓடி சகல நிலைகளுக்கும் சென்று எல்லாவற்றையும் நேரடியாகக் கவனித்து சண்டை செய்கிறாள்.
மிகவும் ஆவேசத்துடனும் வேகத்துடனும் முன்னேறியவளின் உடலை எதிரியின் குண்டுகள் பதம் பார்த்தன. “என்னை ஒருவரும் தூக்க வேண்டாம் ஆமி வாறான் ஆடியுங்கோ” என்று கூறியவாறு தாயகப்பற்றுடன் குருதி சிந்த தாய் மண்ணில் தலைசாய்த்து முத்தமிடுகிறாள்.
நினைவுப்பகிர்வு: போராளி அ.பூரணி.
0 கருத்துகள்