Ad Code

Recent Posts

வீரவேங்கை புலியரசனின் வீரவரலாற்று நினைவுகள்

வீரவேங்கை புலியரசன்

வேலாயுதபிள்ளை சதானந்தன்

முல்லை மாவட்டம்

வீரப்பிறப்பு: 19.07.1981

வீரச்சாவு: 15.05.2009


நிகழ்வு: முள்ளிவாய்க்கால் சமரின் போது 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.


முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. திருமதி வேலாயுதம்பிள்ளை இணையரின் மகனாக 19.07.1981 இல் சதானந்தன் பிறந்தார். சிறுவயது முதலே கல்வியிலும் விளையாட்டுகளிலும் திறமை மிகு மாணவனாக வளர்ந்து வந்த சதானந்தன். தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலில் ஆரம்பித்த எமது விடுதலைப் போராட்டத்தின் மூலம் எமது இனத்தின் விடுதலையை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தினை உணர்ந்து கொண்டவராக 2003 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளியாக இணைந்து கொண்டார்.


புலியரசன் என்னும் பெயருடன் அடிப்படைப் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவர். 2004 இல் நிதித்துறையினால் நடத்தப்பட்ட விவசாயக் கற்கை நெறிக்காகத் தெரிவாகி நிதித்துறைப் பொறுப்பாளரின் நேரடி கண்காணிப்பில் படித்து வந்தார். போர்க்களம் செல்ல வேண்டுமென்ற எண்ணம் இவரது சிந்தையில் மேலோங்கி நின்றதால் அதற்காகத் தனது துறைப் பொறுப்பாளரிடம் அனுமதியைக் கேட்டு வந்தார். இதனால் நிதித்துறை ஆளுகைச் செயலகத்திற்கு அழைக்கப்பட்ட புலியரசன் அங்கு ஊர்தி ஓட்டுநராகவும். சிறப்புப் பணிகளை ஆற்றுபவராகவும் வழங்கப்பட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார்.


சிறிது காலம் நிதித்துறை பொறுப்பாளரின் ஊர்தி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இக்காலப் பகுதியில் நிதித்துறை சார்ந்த நடவடிக்கைகளைத் தென்தமிழீழத்திற்கு விரிவுபடுத்துமாறு தமிழீழத் தேசியத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தென்தமிழீழத்திற்கு நிதித்துறைப் போராளிகளை அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டது. புலியரசனின் ஊர்தி ஓட்டும் திறன். அவரது நேர்மையான செயற்பாடுகள் போன்றவற்றைக் கவனித்த நிதித்துறைப் பொறுப்பாளர் 2005 காலப் பகுதியில் நிதித்துறைப் பணிகளுக்காகச் சென்ற அணியினருடன் போர் ஊர்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார்.


சாதாரண ஓட்டுநர்கள் போர் நடக்கும் பிரதேசங்களில் ஊர்திகள் ஓட்டமுடியாது. ஓட்டும் போராளிகள் மனத்துணிவு. புத்திசாலித்தனம். எந்த நெருக்கடியான நிலையிலும் விரைந்து முடிவெடுக்கும் திறன். சிறந்த அவதானிப்பு மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் கொண்ட போராளியாக புலியரசன் செயற்பட்டார். 


2006 காலப்பகுதியில் தென்தமிழீழப் பகுதிகளில் போர் ஆரம்பமாகிய வேளையில் தனது பணியை அத்தனை சிரமங்களையும் கடந்து ஆற்றி நின்ற போராளியாய் புலியரசன் பேசப்பட்டார். விழுப்புண் அடைந்து போராளிகளை எறிகணை வீச்சுகளுக்கும் குண்டுத்தாக்குதலுக்கும் நடுவே இவரது ஊர்தியில் ஏற்றி வந்து உரிய நேரத்தில் அவர்களை மருத்துவமனைக்குள் சேர்த்து விடுவார்.


இவர் 2007 காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வன்னிக்கு அழைக்கப்பட்டார். அங்கு நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழ்க்குமரனின் ஓட்டுநராகவும் அவரின் உதவியாளராகவும் பணிபுரிந்தார். அதன்பின் நிதித்துறைப் படையணியில் இணைக்கப்பட்டு. வன்னி பெருநிலப்பரப்பை நோக்கி முற்றுகையிட்டு முன்னேறிய இராணுவத்தினரை எதிர்த்து நிதித்துறைப் படையணியுடன் இணைந்து எதிர்த்தாக்குதலில் களமாடி வந்தார்.


2009 ஆரம்பம் வரை களத்தில் நின்ற அவரை நிதித்துறைப் பொறுப்பாளர் மீண்டும் தனது ஊர்தி ஓட்டுநராகவும் உதவியாளராகவும் அழைத்து இருந்தார். அதனை ஏற்ற புவியரசன் நிதித்துறைப் பொறுப்பாளருடன் இணைந்து தோளோடு தோள் நின்று இறுதிக்கணம் வரை தேச விடுதலைக்கான களத்தில் தன்பணிகளை ஆற்றி. 15 மே 2009 அன்று தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்திற்காகக் காவியமாகிய நாயகர்களுடன் மீளாத்துயிலில் ஆழ்ந்து கொண்டார். தன் இனத்தின் விடுதலைக்காகக் களமாடி தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களைத் தமிழினம் என்றும் மறந்து விடாது. இவர்களின் கனவுகளை சுமந்தவர்களாய் அவர்களின் இலட்சியப்பாதையில் இனிவரும் எங்கள் சந்ததியின் வழிகாட்டிகளாக எங்கள் மாவீரர்கள் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.




விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code