சின்னத்தம்பி இராசு செல்வேந்திரன்
தமிழீழம்: யாழ் மாவட்டம்
வீரப்பிறப்பு: 28.051967
வீரச்சாவு: 14.07.1991
ஆனையிறவு போர் தொடங்கி விட்டது. நாங்கள் கண்ணுக்கு முன்பு விரிந்த கடலை கண்களால் அலசிய படியே இருந்தோம்.
இராணுவத்தினரை கடற்கரையில் இறக்கலாமென நாம் எதிர் பார்த்தோம் நீண்ட கடற்கரை எங்களுக்கு ஆட்தொகை காணாதுதான் எங்களில் இன்னும் சிலர் இருந்தால் நல்லா இருக்கும்.
கடல் வெறுமையாய் இருந்தது இடையிடையே தூரத்து பாதையால் பீரங்கி படகொன்று கண்ணை வெட்டும் நேரத்தில் ஓடி மறையும்.
மற்றும்படி கடலும் நாங்களும் அமைதியாகவே இருந்தோம். கடற்கரையில் பாதுகாப்பிற்கு நின்ற புலிகளின் படையணிக்குப்பொறுப்பாளராக சூட்டி அண்ணை நியமிக்கப்பட்டிருந்தார். எனக்குச் குட்டி அண்ணையில் சரியான விருப்பம் அவரின் கலகலப்பான எதையும் இலகுவாக எடுக்கும் - தன்மையை நான் அதிகமாக விரும் பினேன். அவரின் துணிவை வீரம் நிறைந்த செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
நாங்கள் சிறு சிறு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, கடற்கரை நீள இருந்த நிலைகளுக்கு அனுப்பப்பட்டோம். எனக்கு ஒரு ஆயுதம் தரப்படும் என நான் எதிர்பார்த்திருந்தேன். எல்லாப் போராளிகளும் சென்ற பின்பும் நான் நின்றேன்; ஆயுதம் எதுவும் தரப்படவில்லை. எனக்குக் கோபமாகவும், வெறுப்பாகவும் இருந்தது -உள்ளம் குமுறிக்கொண்டிருந்தது. என்னை விளங்கிக் கொள்ளாமல் கடல் அமைதியாக நின்றது.
''எனக்கு ஒரு ஆயுதம் தாங்கோ" என்று சூட்டி அண்ணையிடம் கேட்டேன்.அவர் என்னைப்பார்த்துச் சிரித்தார்.
"நீ என்னோடு நில், நான் செத்தாப் பிறகு என்ர துவக்கைத் தூக்கிப் போராடு" என்று சொல்லிவிட்டு, நடந்தார். அவருக்குப் பின்னால் நான் ஏதேதோ எல்லாம் பேசிக் கொண்டு நடந்தேன். அன்று தொடக்கம்- சூட்டி அண்ணையின் உயிர் பிரியும் அந்தக் கடைசிக் கணம் வரையும், நான் அவருடனேயே நின்றேன்.
சூட்டி அண்ணை ஓய்வில்லாமல் இயந்திரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். கடற்பரப்பில் போர்க்கப்பல்கள் வந்து நின்றன. விமானங்கள் வந்து ஏராளமாகக் குண்டுகளை வீசிச் செல்லும், கடலிலிருந்தும் பீரங்கிக் குண்டுகள் வந்து வீழும். அதற்கிடையிலும் எதிரியைக் கண்காணித்தபடியே நாங்கள் காவல் நிலைகளை அமைத்தோம்.
ஒரு இரவு, அதிகமான நம்பிக்கையோடு அலட்சியமாக நின்ற குழுத்தலைவனொருவனைச் சூட்டி அண்ணை அழைத்தார்.
"இந்தச் சண்டையின் முடிவில் நாங்கள் சோகத்துடன் செல்லலாம். ஆனால் அவமானத்துடன் செல்லக்கூடாது என்று சொன்னார். அவனும் விளங்கிக் கொண்டான். இப்படித்தான் இரவும் பகலும் அந்தக் காவல் நிலைகளைச் சுற்றிச் சுற்றி சூட்டி அண்ணை நடந்துகொண்டே இருப்பார்.
இரவு கடற்பரப்பில் ஆர்ப்பாட்டம் அதிக மாக இருந்தது. நாங்கள் எல்லோரும் விழித்திருந்தோம். தோழர்கள் மகிழ்ச்சியாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். சூட்டி அண்ணை கடலைப் பார்த்துக்கொண்டிருந்தார். தோழன் ஒருவன் சொன்னான்:
சூட்டி அண்ணைக்குப் பிரச்சனை இல்லை. அவர் வீரமரணமடைந்தாலும் அழுவதற்கு வீட்டில் ஆக்களில்லை. தம்பியவை இருவரும் இயக்கம்; அண்ணனும் இயக்கம் - ஏன் அப்பாவும் இயக்கம் என்றுதான் திரி -கிறார். அம்மாதான் பாவம் தனியாக அழ வேண்டும் " என்றான். எல்லாருடனும் சேர்ந்து சூட்டி அண்ணையும் சிரித்தார்.
இருள் விலகி கடல் வெளித்தது. கடலில் கண்ணுக்கெட்டும் தூரத்தில் கப்பல்களும் படகுகளும் சுரும்புள்ளிகளாக நின்றன. இன்று எப்படியும் எதிரி கரையில் இறங்க முயலலாம். ஆனால் எங்கே இறங்குவான்?
இந்த நீண்ட கடற்கரையில் எங்கு நாம் எங்கள் படைகளைக் குவிப்பது? விடிந்தவுடன், வானிலிருந்தும் கடலிலிருந்தும் ஏராளமாக- குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருந்தன. அந்தக் குண்டு வீச்சு மாலை 4 மணி வரை நீடித்துக்கொண்டே இருந்தது.
விமானங்கள் மூலம் எங்கள் நிலைகளை அழித்துவிட்டு அல்லது பலவீனப்படுத்தி விட்டு கடலிலிருந்து இறங்க வேண்டும் என, அவர்கள் தீர்மானித்திருக்கலாம்.
பீரங்கிக் குண்டுகளைத் தூவிக்கொண்டே அந்தப் படகு அணி முன்னேறத் தொடங்கியது.
எங்கள் தாக்குதல் வீச்சுக்குள் அந்தப் படகுகள் வந்ததும், சூட்டி அண்ணைதான் தாக்குதலை ஆரம்பித்தார். எங்கள் கடுமையான தாக்குதலால் அந்தப் படகு அணி நிலை தடுமாறியது. ஒரு விசைப்படகு புகைந்த படியே கப்பலை நோக்கித் தடுமாறித் தடுமாறி ஓடியது; வேறும் சிலது சேதப்பட்டிருக்கலாம்.
எங்கள் துப்பாக்கிகள் ஓய்ந்தபோது, படகுகள் எங்கேயோ ஓடி காணாமற் போயின.
வானில் மீண்டும் விமானங்கள் தோன்றின. எங்களுக்குத் தெரியும் அவர்கள் வருவார்கள் என்று. 3 போர் விமானங்கள், 2 அவ்ரோ விமானங்கள், 2 உலங்கு வானூர்திகள், 1 வேவு விமானம் அனைத்தும் தம்மால் இயன்றவரை குண்டுகளை வீசத் தொடங்கின. நாங்கள் விமானங்களுக்கு எதிராகவும் சண்டையிடத் தொடங்கினோம்.
மாலை 5 மணி.
கடலில் கப்பல்கள், பீரங்கிப்படகுகள், விசைப்படகுகள் எல்லாமே அணிவகுத்து நின்றன. எமக்கு முன்பு சிறிலங்கா கடற்படையின் முழுப்பலமும் நின்றது.
குண்டுகளைக் கக்கிக் கொண்டே அவை கரைக்கு வரத்தொடங்கின. படகுகள் வந்த திசையை நோக்கி சூட்டி அண்ணை ஓடினார். நானும் அவருடன் சேர்ந்து ஓடினேன். கரையில் ஒரு காவலரணில் நாம் நிலை எடுத்தோம். நாங்கள் நாலுபேர் தான் அந்த நிலையில்
இருந்தோம். எங்களுக்கு அருகருகே இருந்த நிலைகளில் வேறும் சில போராளிகள் நின்றனர்.
படகுகள் அண்மையில் வந்தன. எங்கள் துப்பாக்கிகள் இயங்கத்தொடங்கின. நாங்கள் அடிக்க அடிக்க, எதிரி கரையைத் தொட்டான். மிகக்கிட்டிய தூரத்தில் எமக்கும் எதிரிக்குமிடையே ஓர் கடும் சண்டை நடந்தது. எங்கள் ஒவ்வொரு தோழராக விழுந்து கொண்டிருந்தார்கள். எதிரி தனது ரவைகளையும், வெடிகுண்டுகளையும் அளவு கணக்கில்லாமல் அள்ளிச் செலவளித்தான்.
அந்த நேரம்தான் சூட்டி அண்ணையின் தலையில் துப்பாக்கி ரவை ஒன்று தைத்தது, சிறிது நேரத்தில் எங்கள் காவல் நிலை அமைதியானது. தோழர்களெல்லாம் விழுந்து கிடந்ததார்கள். எதிர்ப்பில்லாத அந்தக் காவல் நிலையை நோக்கி ஏராளமாகத் துப்பாக்கி ரவைகள் வந்துகொண்டிருந்தன.
நான் சூட்டி அண்ணையின் துப்பாக்கியை எடுத்தேன்.
இரரணுவத்தினர் ஓடிவந்து கொண்டிருந்தார்கள். துப்பாக்கியை இயக்கியபடியே எழுந்து பின்னால் ஓடினேன்.
என்னைக் கலைத்தபடியே 'துப்பாக்கி ரவைகள் வந்தன. என் பின்பகுதியில் எனக்குத் தெரிகிறது எனக்குச் சூடுபட்டுவிட்டதென்று. சில நிமிடங்களில் நான் என் தோழர்களுக்கு நடுவில் நின்றேன். எனக்கு இயலாமலிருந்தது. ஆனாலும் துப்பாக்கியைக் கொடுக்க மனமில்லை. ஆங்காங்கே சிலதோழர்களின் உடல்கள் கிடந்தன. சிலர் காயமடைந்திருந்தார்கள்.
சிறிது நேரத்தில் நான் தளர்ந்து போனேன். என் துப்பாக்கி நழுவியது - யாரிடமாவது கொடுக்க வேணும்.
நிமிர்ந்து பார்த்தேன். எல்லாப் போராளிகளுமே இரண்டு மூன்று ஆயுதங்களை வைத்திருந்தார்கள். என்னைப்போல், சூட்டி அண்ணையைப்போல் காயமடைந்த அல்லது வீர மரணமடைந்த தோழர்களுடையதாக அவை இருக்கலாம்.
என்ன செய்வது? என் ஆயுதத்தை யாரிடம் கொடுப்பது?
தூரத்தில் பனைகளிற்கும் தென்னைகளுக்கும் இடையே சில வீடுகள் தெரிந்தன. எனக்குக் கத்தவேண்டும்போல் இருந்தது.
"அண்ணையவை, ஓடி வாங்கோ துவக்குகள் இருக்கு; எதிரி வருகிறான் ..."
இளந்திரையன் *
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்