Ad Code

Recent Posts

முள்ளிவாய்க்காலில் இறுதிவரை போராடி வீரவரலாறான இதயன்

வீரவேங்கை இதயன்
லலீந்திரன் இரத்தினம்
யாழ். மாவட்டம்
வீரப்பிறப்பு: 18.01.1979
வீரச்சாவு: 17.05.2009

நிகழ்வு:முள்ளிவாய்க்கால் சமரின் போது 17.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்


சிறப்புப் பொறுப்பாளர் - கணினிப்பிரிவு


யாழ். மாவட்டத்தில் உடுவில் எனும் ஊரில் இரத்தினம் மீனலோஜினி இணையரின் மூத்த மகனாக 18.01.1979 அன்று லலீந்திரன் பிறந்தான். அவனுக்கு அடுத்ததாக தம்பி, தங்கை என மிகவும் மகிழ்வுடன் ஆரம்பித்த அவனது சிறுவயது. துன்பங்களை அறியாததாகவே நகர்ந்தது. இவன் தனது ஆரம்பக் கல்வியை யாழ்/ உடுவில் அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் கற்றான். கல்வியில் சிறந்த மாணவனாகவும் அமைதியான சுபாவம் உடையவனாகவும் நற்பண்புகள் மிகுந்தவனாகவும் அறியப்பட்ட லலீந்திரனுக்கு நல்ல நண்பர்கள் வட்டமும் அமைந்தது. கூடுதல் மகிழ்வாக ஆர்வத்துடன் கல்வியில் கவனம் செலுத்தி வந்தான். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றுடன் சித்தியடைந்தவன். யாழ்/ கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் தன் கல்வியைத் தொடர்ந்தான்.


இக் காலப்பகுதியிலே தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத அவலங்களையும் துயரங்களையும் பதிவாக்கிய இடப்பெயர்வுகளில் ஒன்றான சிறிலங்காப் படையினரால் யாழ். குடாநாட்டை கைப்பற்றும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் நடவடிக்கை காரணமாக 1995 ஒக்டோபர் 30ஆம் நாள் இலட்சக்கணக்கான மக்கள் தம் இருப்பிடங்களையும் உறவுகள் பலரையும் இழந்து தென்மராட்சி வடமராட்சி வன்னிப்பகுதிகளை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்களில் லலீந்திரனின் குடும்பமும் ஒன்று. இதனால் லலீந்திரனின் உயர்தரக் கல்வியும் தடைப்பட்டு போக. தேச விடுதலைக்கான போராட்டத்தில் 1995 ஆம் ஆண்டே தன்னை இணைத்துக் கொண்டான்.


இம்ரான் பாண்டியன் படையணியில் தனது அடிப்படைப் பயிற்சியை முடித்து இதயன் எனும் பெயருடன் வெளியேறினான். பயிற்சி காலத்திலும் நடைபெற்ற தேர்வுகளில் சிறப்புடன் தேர்ச்சி பெற்ற அவனது திறமையையும் செயற்பாடுகளையும் அவதானித்த பொறுப்பாளர் மருத்துவம் கற்பதற்காக மருத்துவப் பிரிவுக்கு அனுப்பி வைத்தார். அபயன் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ அணியினருடன் அடிப்படை மருத்துவக் கல்வியைத் திறமையாகக் கற்று. நிறைவுசெய்து கொண்டு இராதா வான்காப்புப் படைக்குத் திரும்பிய இதயன் தனது நற்பண்புகள் மூலமும் நேர்த்தியான பணிகள் மூலமும் நம்பிக்கைக்குரிய மருத்துவப் போராளியாக அறியப்பட்டான்.


இதன் பின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் கடாபி அவர்கள் களமுனையின் முக்கியமான பகுதி ஒன்றின் மருத்துவ தேவைக்காக இதயனை அனுப்பி வைத்தார். அங்கே தனக்கு வழங்கப்பட்ட பணிகளை திறம்பட முடித்து, பொறுப்பாளரின் கட்டளைக்கு அமைவாக முகாம் திரும்பினான் இதயன். மருத்துவத் துறையில் மிகுந்த கவனமுடையவனாகவும் காயமடையும் நோய்வாய்ப்படும் போராளிகளைத் தாயன்போடு அரவணைத்து அக்கறையுடன் பராமரித்து வந்த இதயனது பணிகள் சிறப்புத் தளபதியினால் பாராட்டப்பட்டது. தொடர்ந்தும் மேலதிக மருத்துவக் கல்வியைக் கற்பதற்காகக் கீர்த்திகா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான். அங்கே போராளிகளால் அன்பாக டொக்ரர் அன்ரி என அழைக்கப்படும் திருமதி எழுமதி கரிகாலன் அவர்களின் தலைமையில் சிறப்பு மருத்துவக் கற்கை நெறிகளைக் கற்றுத் தேர்ந்து சிறப்பு சித்தி பெற்றவனாய் மீண்டும் தன் படையணிக்குத் திரும்பினான் இதயன்.


இதயனது இரகசியம் பேணும் தன்மையும் அமைதியும் ஆளுமையான செயல்களையும் அறிந்து கொண்ட சிறப்புத் தளபதி இதயனை தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணிக்கான மருத்துவப் போராளியாக நியமித்தார். அப்பணியின் காத்திரத்தன்மையை விளக்கி அனைவரையும் நேர்த்தியான முறையில் கவனித்து நோய்களில் இருந்து பாதுகாத்து வந்தான். இதயனின் ஆற்றல்களை பொறுப்பாளர் மூலம் அறிந்து கொண்ட தலைவர் அவர்கள் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி அவனது மருத்துவ சேவையினை விரிவுபடுத்துமாறு பணித்தார். அனைத்தும் நிறைவான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இதயனின் மருத்துவப் பணிகள் தொடர்ந்தன. 


2000 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை ஆரம்பிப்பதற்காகத் தலைவரின் எண்ணப்படி மருத்துவக் கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டபோது அவ் அணியினருடன் இதயனும் இணைக்கப்பட்டு கல்வியினை நிறைவுசெய்து கொண்டு அதிவிசேட சித்தியுடன் சிறப்பு மருத்துவப் போராளியாக வெளியேறினான்.


பின்வந்த நாள்களில் இதயனின் திறமைமிகு பணிகளால் கணினிப் பிரிவின் சிறப்புப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். அதன் பின்பும் தனக்கு வழங்கப்பட்ட பணிகள் ஒவ்வொன்றிலும் தனது முழுமையான பங்களிப்பினை வழங்கினான். மிகச்சிறந்த சிந்தனையோடும் பெண் போராளிகள் உட்பட அனைவருக்கும் மதிப்பளித்து தமிழீழத் தேசியத் தலைவர் மீதும் விடுதலைப் போராட்டத்தின் மீதும் அளவற்ற பற்றுதலோடு மருத்துவத்துறையில் தனக்கு வழங்கப்பட்ட அத்தனை பணிகளிலும் பண்பும் அக்கறையும் நேர்த்தியும் கொண்ட சிறந்த போராளியாக அறிந்தவர் இதயங்களில் இதயன் இடம் பிடித்துக் கொண்டான்.


இடங்கள் குறுகி போர்க்களங்கள் எங்கும் அதிர்ந்து கொண்டிருந்த இறுதிப் போர்ச் சூழலிலும் கூட நெஞ்சுரம் கொண்ட போராளியாய் களப்பணியாற்றிய அந்த வீரமறவன் கடுமையான விழுப்புண்களால் நகர முடியாத வேளையிலும் தன் இலட்சியத்தில் உறுதி கொண்டவனாக இறுதிவரை உயிருடன் எதிரியிடம் தான் பிடிபடக்கூடாது என்ற விடுதலைப் போராளியின் மரபிற்கேற்ப தன்னைத்தானே அழித்துக் கொண்டு 17 மே 2009 அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் தன் விழிகளை மூடிக்கொண்டான்.


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றி 

சூரியப்புதல்வர்கள் -2023



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code