Ad Code

Recent Posts

கடற்கரும்புலி கப்டன் இளமதி வீர வரலாற்று நினைவுகள்


கடற்கரும்புலி 

கப்டன் இளமதி

கனகநாயகம்பிள்ளை ஜெயசித்திரா 

வேலணை மேற்கு, 

யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 18.09.1975 

வீரச்சாவு: 26.06.2000


நிகழ்வு: 26.06.2000 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் யாழ் குடாநாட்டு சிறிலங்கா படையினருக்கான ஆயுத – தளபாட வெடிமருந்து ஏற்றிச் சென்ற ‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவு


யாழ். குடாவில் நிலை கொண்டிருக்கும் படையினருக்குத் தேவையான ஆயுதங்கள் வெடிபொருட்களுடன் காங்கேசன்துறைத் துறைமுகம் நோக்கி டோறா பீரங்கிப் படகுகளின் வழித்துணையுடன் சென்ற “உகண” கப்பல் 26.06.2000ம் அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டது.


சுமார் எட்டு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமரின் நடுவே தமது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட படகுகளால் குறித்த கப்பலை கடற்கரும்புலிகள் தகர்த்து மூழ்கடித்தனர். இதன்போது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் கடுமையாகச் சேதமடைந்தது.


இத்தாக்குதலின்போது ஆறு கடற்கரும்புலிகள் தமது இன்னுயிர்களை ஈர்ந்து கடலன்னை மடியில் வீரகாவியமாகினர்.


தீவகம் வேலணை இதுதான் இவளது சொந்தமண். இந்தமண் 1990ம் ஆண்டு சிறிலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போது நமது மண்ணை எதிரியிடமிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக தன்னையும் போராளியாக மாற்றிக்கொண்டவள் தான் இளமதி.


பிறப்பிலே இவளது கால் ஒன்று இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் தன்னால் பயிற்சிகளை எடுத்து ஒரு போராளியாக முடியும் என்ற இவளது நம்பிக்கை வெற்றியைத் தந்தது.


பயிற்சியின் பின்பு தொலைத்தொடர்புக் கல்வியைப் பெற்றிருந்த இளமதி கடற்புலிகளின் தரையோர பாதுகாப்பு நிலையத்தில் தனது கடமையைச் செய்தாள்.


இந்த நேரத்தில் கொக்குத்தொடுவாய்ச் சமரில் இவளது சகோதரி வீரச்சாவடைந்த போது இவளுக்குள் இருந்த விடுதலை உணர்வு இன்னும் இன்னும் பெருவீச்சாகியது. இதுவே கடற்கரும்புலியாக இவளை மாற்றியது.


செவ்வானம் படையணியில் கடற்கரும்புலிகளுக்கான பயிற்சிகளை நிறைவு செய்தவளுக்கு, இலக்கு இலகுவில் கிடைக்கவில்லை. தொடர்ந்து தனது மனதை தளரவிடாது கடற்தாக்குதல் அணியில் தொலைத்தொடர்பாளராக, படகுச் சாரதியாக, இயந்திரத் திருத்துனராக தனது பணியைச் செய்திருந்த இளமதி எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நாளும் வந்தது.


கூட நின்ற தோழியருக்கு இனி நான் வரமாட்டேன் வெற்றிச் செய்திதான் வரும் என்று கூறிச்சென்றவள் எதிரியின் உகண கப்பல் தகர்ப்பில் வெற்றிச் செய்தியைத் தந்து வீரகாவியமாகிப் போனாள்.



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code